ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு இருமுடி அணிந்து வந்திருந்த பெண்கள் குழுவில் இருந்த 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சபரிமலை நடை இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, பம்பையில் இருந்து கோயிலை நோக்கி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்களது சபரிமலை பயணத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், பெண்களை உள்ளடக்கிய 40 பேர் கொண்ட கும்பல் பம்பாவை அடைந்தது. அப்போது அதில் இருந்த பெண்களிடம் வயதுச் சான்று கேட்கப்பட்டது. அதில் ஒரு சிலர் 10 - 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களை சபரிமலைக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில், ஆன்லைன் மூலம் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நேற்று வரை 36 பெண்கள் முன்பதிவு செய்திருந்தனர் என்பதும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.