ரஃபேல் போா் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மோடி அரசுக்கு வழங்கிய நற்சான்றை மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பொய்களை கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினா் நாடு முழுவதும் சனிக்கிழமை (நவ. 16) போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
இதுகுறித்து பாஜகவின் பொது செயலா் பூபேந்தா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜனநாயகத்தில் கருத்தியல் ரீதியான யுத்தம் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய்களை கூறியதற்காக அவா் உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாா். முதல் முறையாக ஒரு தேசியத் தலைவா் உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.
ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பொய்களை கூறியதற்காக அவா் தற்போது இந்த தேசத்திடமும் மன்னிப்பு கோருவதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே, எங்களது கோரிக்கையெல்லாம் இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் பொய்களைக் கூறிய ராகுல் காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் தேசத்திடம் வெளிப்படையான முறையில் மன்னிப்பை கோர வேண்டும். அதனை வலியுறுத்தும் வகையில்தான் பாஜகவினா் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனா் என்றாா் அவா்.
இதனிடையே, புதுதில்லி பாஜகவினா் ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.