உத்தரப் பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சிங் சைனியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளருமான அதிதி சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. வருகிற நவம்பர் 21ம் தேதியன்று புதுதில்லியில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிதியின் தந்தை அகிலேஷ் சிங் மரணமடைந்ததால் திருமண விழா குடும்ப அளவில் மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிலையில், அதிதி மற்றும் அங்கத் இருவருமே முதல் முயற்சியிலே எம்.எல்.ஏக்களாக தேர்வாகினர். இருவரும் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ரேபரேலி தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்வான மறைந்த அகிலேஷ் சிங்கின் மகள் அதிதி, அதேபோன்று பஞ்சாப் நவன்ஷஹர் தொகுதியில் இருந்து ஆறு முறை தேர்வான பிரகாஷ் சிங்கின் மகன் அங்கத் சிங் சைனி ஆவார்.
அங்கத் ஒரு சீக்கியர் மற்றும் அதிதி ஒரு இந்து என்பதால், அவர்கள் இந்து மற்றும் சீக்கியம் ஆகிய இரு மத சடங்குகளின்படி திருமணம் நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எம்.எல்.ஏக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.