மகாராஷ்டிர முதல்வர் பதவியை பாஜக 3 ஆண்டுகளும், சிவசேனை 2 ஆண்டுகளும் வகிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே நாடாளுமன்றத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத்தைச் சந்தித்தேன். அவரிடம் பாஜக 3 ஆண்டுகளும், சிவசேனை 2 ஆண்டுகளும் முதல்வர் பதவியை வகித்துக் கொள்வது குறித்து சிந்திக்கச் சொன்னேன். அவர் இதுகுறித்து பாஜகவிடம் பேசுமாறு தெரிவித்தார். பாஜக இதற்கு சம்மதித்தால், நாங்கள் இதுகுறித்து சிந்திப்போம் என்றார். எனவே, நான் இதுகுறித்து பாஜகவிடம் பேசவுள்ளேன்" என்றார்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து அரசு அமைப்பது குறித்து குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை விலகியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்கான இடத்திலேயே சிவசேனைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதுபோன்ற அடுத்தடுத்த செயல்களால் பாஜக - சிவசேனை கூட்டணி முழுமையாக முறிந்ததாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே கூறியிருக்கும் புதிய ஃபார்முலா மகாராஷ்டிர அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.