முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தான் ஜிலேபி சாப்பிடுவதால்தான் காற்று மாசு அதிகரிக்கிறதா என கேள்வி எழுப்பி விமரிசனங்களுக்குப் பதிலடி தந்துள்ளார்.
காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் கடந்த 15-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வர்ணனை செய்ய இந்தூருக்குச் சென்றுவிட்டார். அங்கு அவர் சக வர்ணனையாளர்களுடன் ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, காற்று மாசு குறித்து கூட்டத்தைப் புறக்கணித்து, வர்ணனையாளர் பணிக்குச் சென்றதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமரிசனங்கள் எழுந்தது. இதன் நீட்சியாக கௌதம் கம்பீர் காணவில்லை என்றும், கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும்போது பார்த்தது என்றும் அவரது புகைப்படங்கள் கூடிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்திருந்த கௌதம் கம்பீர் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் ஜிலேபி சாப்பிடுவதால்தான் தில்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது என்றால் காலம் முழுவதும் நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறேன். காற்று மாசு பிரச்னைக்கு தில்லியின் எம்பி.,யாக 5 மாதங்களில் நான் ஆற்றிய பணியே, இவ்விவகாரத்துக்கு நான் அளிக்கும் முக்கியத்துவத்துக்கு சாட்சி.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் ஆட்டத்துக்கு வர்ணனை செய்ய வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆம் ஆத்மி என் மீது தாக்குதல் நடத்துவதில் கவனத்தை செலுத்துவதைவிட காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
நகர்ப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இருக்கும் ஒரே மக்களவை உறுப்பினர் கௌதம் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.