சபரிமலை கோவிலுக்குச் செல்ல 139 தமிழகப் பெண்கள் உள்பட மொத்தம் 319 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளம் மட்டுமில்லாது நாடு முழுவதுமே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவு செல்லும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, பெண்கள் பலர் சபரிமலை கோவிலுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் 10 பெண்களும், நேற்று ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்களும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்று 12 வயது சிறுமி ஒருவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, சபரிமலைக்குச் செல்ல 319 இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து 139 பேரும், ஆந்திராவில் 160, கர்நாடகாவில் 9, தெலுங்கானாவில் 8 மற்றும் ஒடிசாவில் இருந்து 3 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், கேரளாவில் இருந்து இளம்பெண்கள் யாரும் முன்பதிவு செய்யவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும், இந்து அமைப்புகளின் எதிர்ப்பினாலும், பாதுகாப்பு கருதியும் இதுவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே, முன்பதிவு செய்யப்பட்ட பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது சந்தேகம் தான் என்று பேசப்படுகிறது. இத்தனை பேருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.