இந்தியாவில் மட்டுமல்ல.. உலக அளவிலும் கடந்த சில ஆண்டுகளாக கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் அதே சமயம், காதல் பிரச்னையில் கொலைகள் அதிகரித்துள்ளன.
என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில், கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை காதல் காரணமாக கொலைச் சம்பவங்கள் நடப்பது அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் பதிவு செய்திருக்கும் அறிக்கையில், 2001ம் ஆண்டு 36,202 கொலைகள் நடந்திருக்கிறது. இது 2017ம் ஆண்டு 28,653 ஆகக் குறைந்துள்ளது. இது 21% குறைவாகும். அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் பழிவாங்கும் வகையில் நடந்த கொலைகள் 4.3% குறைந்துள்ளது. சொத்துக்காக நடந்த கொலைகள் 12% குறைந்துள்ளது. அதே சமயம், காதல் (கள்ளக் காதல் உட்பட) தொடர்பாக நடந்த கொலைகள் 28% அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்ல.. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் கொலைக்கான முக்கியக் காரணங்களில் முதல் இடத்தில் காதல்தான் இருக்கிறது. ஆந்திராவில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 384 பேர் காதல் தொடர்பான சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒரு நாளைக்கு காதல் தொடர்பாக குறைந்தது 1 கொலையாவது நடந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த பட்டியலில், ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விஞ்சும் விதமாக இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் காதல் தொடர்பான கொலைகளில் உச்சமாக ஆண்டுக்கு சராசரியாக 395 பேர் கொல்லப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகியவை உள்ளன.
இந்த மாநிலங்களவைத் தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் கொலைக்கான காரணங்களின் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில்தான் காதல் இருக்கிறது. இந்த பட்டியலில் சட்டீஸ்கர், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், பிகார், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகியவை இடம்பெறுகின்றன.
கேரளா, மேற்கு வங்கத்தில் காதல் தொடர்பான கொலைகள் வெகுக் குறைவாகவே நடக்கின்றன. சொல்லப் போனால், அந்த காரணம் கடைசி இடத்தில்தான் இருக்கிறது.