சிவசேனை எம்எல்ஏ-க்கள் இடையே பிளவு? சொகுசு விடுதியில் கைகலப்பு!

மாநிலத்தில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. 
சிவசேனை எம்எல்ஏ-க்கள் இடையே பிளவு? சொகுசு விடுதியில் கைகலப்பு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலை பாஜக-சிவசேனை கட்சிகள் கூட்டணி அமைத்து எதிா்கொண்ட நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவி வேண்டும் என சிவசேனை கோரியதால் அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதனால் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைவது தாமதமானது.

இதையடுத்து மாநிலத்தில் ஆட்சியமைக்க முறையே பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அடுத்தடுத்து அழைப்பு விடுத்தாா்.

அந்த முயற்சியும் பலனளிக்காததை அடுத்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த ஆளுநா் கோஷியாரி பரிந்துரைத்தாா். இதையடுத்து கடந்த 12-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

மாநிலத்தில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இச்சூழலில் சோனியாவை சரத் பவாா் சந்தித்துள்ளாா். இருப்பினும் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதிலும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க உத்தவ் தாக்கரே முயற்சித்து வருவது அக்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாகவே மும்பையின் மேற்குப் பகுதியான மலட் எனுமிடத்தில் உள்ள பிரபல ரீட்ரீட் எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனை எம்எல்ஏ-க்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தலைமை மீதான கட்சியினரின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிவசேனை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சில எம்எல்ஏ-க்கள் மத்தியில் சொகுசு விடுதியில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நள்ளிரவில் அங்கு சென்ற ஆதித்ய தாக்கரே, அவர்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. 

இவ்விவகாரத்தில் சிவசேனையின் மொத்தமுள்ள 56 எம்எல்ஏ-க்களில் 40 பேர் கட்சித் தலைமை மீது வெறுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பான நிலையில் உள்ள மகாராஷ்டிர அரசியலில் இவ்விவகாரங்கள் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com