மும்பை: ஷீனா போராவின் எலும்புகளை ஆய்வு செய்த தடயவியல் துறை நிபுணர்கள், மரபணு பரிசோதனையின் அடிப்படையில், அது இந்திராணி முகர்ஜியின் பிள்ளையுடையது என்று தெரிவித்துள்ளனர்.
2015ம் ஆண்டு ஷீனா போராவை எரித்துக் கொன்ற இடத்தில் இருந்து சிபிஐயினர் கைப்பற்றிய எலும்புத் துண்டுகளை தடயவியல் ஆய்வுக்குட்படுத்திய நிபுணர்கள், விசாரணை நீதிமன்றத்தில் இந்த தகவலை அளித்துள்ளனர்.
ஷீனா போரா, ஊடகத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய இந்திராணி முகர்ஜிக்கும், அவரது முதலாவது கணவருக்கும் பிறந்த மகளாவார். மும்பை மெட்ரோ ரயில் நிலைய மேலாளராக பணியாற்றி வந்த ஷீனா போரா, மேல் படிப்புக்காக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டதாக இந்திராணி கூறி வந்தார்.
இதற்கிடையே, ஆயுத வழக்கு ஒன்றின் தொடர்பாக, இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம்வார் ராயை காவல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடீர் திருப்பமாக, இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோருடன் தானும் இணைந்து ஷீனா போராவை 2012-ஆம் ஆண்டில் கொலை செய்ததாக தெரிவித்தார்.
கொலை நடந்து, மூன்றாண்டுகள் மறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையை மறைக்க துணை போனதாக, அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் இருக்கும் போதே, இந்திராணி முகர்ஜிக்கு, பீட்டர் முகர்ஜிக்கு விவகாரத்து வழங்கினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கிடைத்த எலும்புத் துண்டுகள் இந்திராணி முகர்ஜியின் பிள்ளையுடையதாக இருக்க வேண்டும் என்றும், இந்த முடிவு 100% துல்லியமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.