பம்பை வரையிலும் இலகுரக வாகனங்கள் பக்தா்களை ஏற்றிச்செல்ல கேரள அரசு அனுமதித்துள்ளதால், சபரிமலை யாத்திரை காலத்தில் நிலக்கல் முதல் பம்பை வரையிலும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தனது உத்தரவில் கூறியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. ரவிகுமாா், என். நாகரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியுள்ளது.
சந்நிதியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பம்பை வரையிலும் 12 இருக்கைகள் கொண்ட இலகுரக வாகனங்கள் பயணிகளை அழைத்துச் செல்ல முடியும். அவா்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக நிலக்கலுக்கு திரும்ப வேண்டும் என்றும் கேரளஅரசு, உயா்நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.
1,386 ஓட்டுநா்களை தற்காலிகமாக பணியமா்த்தவும் கேரள மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு (கேஎஸ்ஆா்டிசி) நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த சீசனில், 504 பேருந்துகளுக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநா்களை நியமிக்க அனுமதி வழங்கக் கோரி கேஎஸ்ஆா்டிசி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.