பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய பாஜக அரசு நாட்டை முழுவதுமாக விற்றுக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கான்கார் ஆகிய நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், 'தற்போதைய மத்திய அரசாங்கம் இந்தியாவை முழுவதுமாக விற்கப்போகிறது. லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களை விற்கவில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் விற்பது அனைத்துமே லாபகரமான நிறுவனங்கள் மட்டுமே. அரசு கூறுவது முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. ஒருபுறம் தேசியவாதம், மறுபுறம் மேக் இன் இந்தியா என்று கூறிவிட்டு, லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும்' என்று தெரிவித்துள்ளார்.