மும்பை: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதாகவும், வெள்ளியன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக, காங்கிரஸ் காரியக் கமிட்டி வியாழன் காலை ஒப்புதலளித்தது. அதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மஹாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவுகான், தேசியவாத காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்குப்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்து விட்டது. கூட்டணியின் அமைப்பு குறித்த இறுதி முடிவு வெள்ளியன்று அறிவிக்கப்படும். நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தை அறிவிக்கும் போது, அதிகாரப் பங்கீடு தொடர்பான மற்ற விஷ்யங்கள் தெரிய வரும். நாளை மும்பையில் நாங்கள் இதர கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதன்பின்னர் நாங்கள் சிவசேனையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தேசியவாதக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக்கும் உடனிருந்தார்.