2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கேரளாவில் பிளாஸ்டிக்கிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து வருகிறது. இந்நிலையில், கேரள அரசும் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே அனுமதிக்கும் என்றும் மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மாநிலத்திற்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களான கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் கேரள மாநில மதுபானங்கள் கார்ப்பரேஷன் கீழ் வரும் நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரு நிறுவனங்களும் தாங்கள் விநியோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, ஒரு குறிப்பிட்ட தரம் கொண்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஜனவரி 1, 2020 முதல், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.