வயநாடு: கேரளாவின் வயநாட்டில் பள்ளி ஒன்றில் 9 வயது சிறுமி பாம்புக் கடித்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவி ஷெரின், வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது பாம்பு கடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளியின் சுவரில் இருந்த ஒரு துளைக்குள் இருந்து பாம்பு வந்ததாகக் கூறப்படுகிறது. பாம்புக் கடித்த தகவலறிந்ததும் சிறுமியை பள்ளி தலைமை ஆசிரியர் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். சிறுமி தொடர்ந்து வாந்தி எடுத்ததால் உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
ஆனால், சிறுமியின் நிலைமை மோசமடைந்ததால் கொண்டு செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில், பாம்பு கடித்த தகவலறிந்து சிறுமியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு சேர்க்காததால் தான் தன் மகள் ஷெரின் உயிரிழந்தாள் என்று பெற்றோரும், உறவினர்களும் பள்ளி தலைமை ஆசிரியரையும், பள்ளியையும் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வயநாடு மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.