பொய் என்றாலும் அதிலும் ஒரு அளவு வேண்டாமா? முகேஷ் அம்பானி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.500 கோடி பணம் கொடுத்ததாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் அதுவும் புகைப்படத்துடன் பரவி வருகிறது.
ஆனால், அது உண்மையான தகவல் அல்ல என்றும், அந்த புகைப்படம் 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, முகேஷ் அம்பானி சந்தித்த போது எடுத்தப் புகைப்படம் என்றும் விளக்கமும் வைரலாகி வருகிறது.
2017ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை ஒருவர், தற்போது பதிவு செய்து, முகேஷ் அம்பானி ராமர் கோயில் கட்ட ரூ.500 கோடி கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் போட, அதனை ஒரு 10 ஆயிரம் பேர் ஷேர் செய்ய, உடனே அது வைரலானது.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல, வைரலாவதெல்லாம் உண்மையல்ல என்பதை மக்களே தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.
எந்த செய்தி உங்களை வந்தடைந்தாலும், உடனே அதனை ஷேர் அல்லது ஃபார்வேர்ட் செய்யாமல், அதன் உண்மைத்தன்மையை பரிசோதியுங்கள். இல்லையென்றால், அதை யாருக்கும் பகிராமல் அப்படியே விட்டுவிடுங்கள் போதும்.