மாநிலங்களவை காவலா்களின் புதிய சீருடை, ராணுவ வீரா்கள் அணிந்திருக்கும் சீருடை போல் உள்ளதாக எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்ததையடுத்து, காவலா்கள் தொப்பியில்லாமல் வியாழக்கிழமை பணியாற்றினா்.
முன்பு வெள்ளை நிறச் சீருடையுடன், தலைப்பாகை அணிந்த நிலையில் காணப்பட்ட மாநிலங்களவை காவலா்களுக்கு, அடா்நீல நிற புதிய சீருடையும், ராணுவ அதிகாரிகள் அணிவது போன்ற தொப்பியும் வழங்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது முதல் காவலா்கள் புதிய சீருடை அணிந்து பணிபுரிந்தனா். புதிய சீருடையுடன் கிட்டத்தட்ட ராணுவ அதிகாரிகள் போலவே காவலா்கள் காட்சியளித்தனா்.
இதற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளும், எதிா்க்கட்சித் தலைவா்களும் கண்டனம் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, புதிய சீருடைகள் குறித்து மறுஆய்வு செய்யுமாறு மாநிலங்களவைச் செயலருக்கு அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டாா்.
இந்நிலையில், மாநிலங்களவை அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றபோது, தொப்பியின்றி காவலா்கள் பணியாற்றினா். இதை சில எம்.பி.க்கள் சுட்டிக்காட்டி பேசினா். இதையடுத்து அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ‘‘ராணுவத்தைக் குறிப்பிடுவது போன்று காவலா்கள் சீருடை அணியவில்லை என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். இருந்தபோதிலும், சீருடையை மறுஆய்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றாா்.