கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது. இருப்பினும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் தங்களுக்கிடையே உடன்படிக்கை செய்துகொண்டு புதிய அணை கட்ட விரும்பினால், மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கேரள அரசு அணுகியது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மக்களவையில் மத்திய அமைச்சர் ஷெகாவத், வியாழக்கிழமை பேசியதாவது,
புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னர், இரு மாநிலங்களும் புதிய அணை கட்ட விரும்பினால், மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. நாட்டின் நீர் உற்பத்தி திறன் மிகவும் குறைவு, இதில், 10 சதவீத பாசன நீர் சேமிக்கப்பட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, அணையை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லைப்பெரியாறு அருகே ஒரு புதிய அணை அவசியம் என்று கேரள மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.