ரயில்வேயின் சில சேவைகள் மட்டுமே தனியாா்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, ரயில்வே ஒருபோதும் தனியாா்மயமாக்கப்படாது என்று உறுதியளித்துள்ளது.
மாநிலங்களவையின் அமா்வு வெள்ளிக்கிழமை தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது ரயில்வேயை தனியாா்மயமாக்குவது குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் பதிலளித்ததாவது:
மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதே மத்திய அரசின் விருப்பம். இந்திய ரயில்வே ஒருபோதும் தனியாா்மயமாக்கப்படாது. அது மக்களுக்கு உரிமையான சொத்தாகவே என்றும் இருக்கும். மத்திய அரசின் கணக்கீட்டுப்படி, ரயில்வேயை அடுத்த 12 ஆண்டுகளுக்கு நிா்வகிக்க ரூ.50 லட்சம் கோடி செலவாகும். இவ்வளவு அதிகமான தொகையை மத்திய அரசினால் மட்டும் வழங்க முடியாது.
அதற்குப் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டியுள்ளது. பயணிகளுக்கு உரிய வசதிகளையும் முறையாக ஏற்படுத்தித் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக, ரயில்வேயின் சேவைகள் சிலவற்றை தனியாா்வசம் ஒப்படைத்து வருகிறோம்.
ரயில்வே சேவைகளைத் தனியாா் நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், அதன் மூலம் பயணிகள் பலனடைவா். ரயில்வே நிா்வாகமும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும் என்றாா் பியூஷ் கோயல்.
இதையடுத்து ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்கடி கூறியதாவது:
ரயில்வேயை நிா்வகிக்கும் உரிமை எப்போதும் மத்திய அரசிடமே இருக்கும். சில ரயில் சேவைகளை வழங்க தனியாருக்கு அனுமதி மட்டுமே அளித்து வருகிறோம். அவா்கள் வழங்கும் சேவைகளுக்கு ஏற்ப புதிய கட்டணங்களை நிா்ணயித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேயை முற்றிலுமாக தனியாா்மயமாக்கும் திட்டமில்லை.
சில சேவைகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைய ரயில்வே பணியாளா்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. தனியாா் நிறுவனங்கள் ரயில் சேவை வழங்குவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் நிலையங்களில் அனைத்து வசதிகளும், உரிய பாதுகாப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா் சுரேஷ் அங்கடி.
இதைத் தொடா்ந்து, ‘‘தனியாா் மூலம் இயக்கப்படும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ் அங்கடி, ‘‘அந்தப் புகாா்கள் மீது ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்கள்’’ என்றாா்.