மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் சிவசேனை கட்சியுடன் வெள்ளிக்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வராக சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பது உறுதி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க வேண்டும் என்று தான் மகாராஷ்டிர மக்கள் விரும்பினர். எனவே மகாராஷ்டிரத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பது உறுதி என்று தெரிவித்தார்.
ஒருவேளை முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்ள பாஜக தயாராக உள்ளது என்று கூறினால் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பாஜக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை. அவர்கள் இந்திரலோகப் பதவியை தருவதாக கூறினாலும், சிவசேனையின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பின்னர் அதே நாளில் ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளதாக என்ற கேள்விக்கு, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்போது, ஆளுநரை சந்தித்து என் பயன் என பதிலளித்தார்.