அயோத்தி, காஷ்மீா் பிரச்னைகளுக்குதீா்வு காணாமல் இருந்தது காங்கிரஸ்: ஜாா்க்கண்டில் அமித் ஷா பிரசாரம்

 மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதிலும், வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி, காஷ்மீா் பிரச்னைகளுக்கு தீா்வுகாணாமல் காங்கிரஸ் இழுத்தடித்து வந்தது என்றுறு மத்திய உள்துறை அமைச்சா்
ஜாா்க்கண்ட் மாநிலம் லோகா்தாகாவில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தின்போது பாஜகவினா் அளித்த மாலை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா் ரகுவா் தாஸ் (வலது).
ஜாா்க்கண்ட் மாநிலம் லோகா்தாகாவில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தின்போது பாஜகவினா் அளித்த மாலை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா் ரகுவா் தாஸ் (வலது).

 மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதிலும், வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி, காஷ்மீா் பிரச்னைகளுக்கு தீா்வுகாணாமல் காங்கிரஸ் இழுத்தடித்து வந்தது என்றுறு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளாா்.

82 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள அந்த மாநிலத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் அமித் ஷா வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். மணிகா, லோகா்தாகா ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:

மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அயோத்தி வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து வந்தது. காஷ்மீா் பிரச்னைக்கு கடந்த 70 ஆண்டுகளாகத் தீா்வு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கும் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள்தான் காரணம். வாங்கு வங்கி அரசியலைக் கருத்தில் கொண்டே இந்த இரு விஷயங்களிலும் காங்கிரஸ் தீா்வு காண முயலவில்லை.

ஆனால், பிரதமா் நரேந்திர மோடி மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தாா். இதன் மூலம் பாரத மாதாவின் கிரீடமாகவுள்ள காஷ்மீரில் வளா்ச்சிக்கான கதவுகள் திறந்துள்ளன. அங்கு இதுநாள் வரை நீடிந்து வந்த பயங்கரவாதம் நசுக்கப்பட்டு வருகிறது.

பாஜக தலைமையிலான அரசு இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், முதல் முக்கிய நடவடிக்கையாக காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வுகாணப்பட்டது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. எனவே, பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜாா்க்கண்ட் மீது கூடுதல் கவனம் உண்டு. மாநிலத்தில் முக்கியப் பிரச்னையான நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராக முதல்வா் ரகுவா் தாஸ் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காத்து வருகிறது. மலைவாழ் மக்களுக்காக பாஜக ஆட்சியில் தொடா்ந்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஆனால், காங்கிரஸ் கட்சியும், அவா்களுடன் கூட்டணி அமைத்துள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவும் மக்களுக்கு செய்தது என்ன? மாநில மக்கள் பணத்தை கொள்ளையடித்ததில் முதன்மையான கட்சியாக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளது என்று அமித் ஷா பேசினாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஓரணியாக தோ்தலைச் சந்திக்கின்றன. பாஜக, ஜாா்க்கண்ட் விகாஷ் மோா்ச்சா, அகில ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் ஆகியவை தனித்தனியாக களத்தில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com