மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், சனிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நேற்று வரை சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பம் ஏற்பட்டு பெரும் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வராக அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றதற்கு எதிராக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்றதற்கு ஆளுநரின் முறையான அழைப்பு இல்லை மற்றும் ஆளுநரிடம் இந்த ஆட்சி தொடர்பான முறையான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ள சிவசேனை, தங்கள் தலைமையிலான கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் முறைப்படி அழைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளது.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை உடனடியாக நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருவதாக 3 கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்த மூத்த வழக்குரைஞர் தேவதத் கம்மத் தெரிவித்தார்.