ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சிவசேனை, காங்கிரஸ், என்சிபி கடிதம்

பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சிவசேனை, காங்கிரஸ், என்சிபி கடிதம்

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, முதல்வராக பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வராக என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் பதவியேற்றனர். ஆளுநா் பகத்சிங் கோஷியாரி சனிக்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அதற்கு முன்னதாக, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து செய்யப்பட்டது. 

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை கூட்டாக மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் அம்மாநில ஆளுநர் மாளிகைக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தற்போதைய பாஜக தலைமையிலான அரசிடம் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக, தங்களிடம் ஆட்சியமைக்க தேவையான 165 எம்எல்ஏ-க்களின் பலம் உள்ளதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com