புவனேஸ்வர் ; இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஒதிஷாவில் 1865 பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் 1079 கொலைகள் நடைபெற்றுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, மாநில உள்துறை அமைச்சர் திப்யாஷங்கர் மிஸ்ரா கூறியதாவது:
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதாவது செப்டம்பர் மாத இறுதி வரை, ஒதிஷாவில் 1865 பாலியல் வன்முறை சம்பவங்கள், 1079 கொலைகள் மற்றும் 406 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், பதிவு செய்யப்பட்ட 1865 பாலியல் வமுறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1149 வழக்குகள் பதிவு செய்ப்பட்டுள்ளதாகவும், அதில் 604 வழக்குகள் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடாபானவை என்றும் தெரிவித்தார்.
அதேபோல சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் பதிவாகும் போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 24 சிறப்பு நீதிமன்றங்கள் மாநிலம் முழுதும் நிறுவப்பட்டுள்ளன என்றும், இதர குற்ற வழக்குகளுக்காக 21 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.