புது தில்லி: எத்தனை குறைகள் கூறப்பட்டாலும் கிராமப்புற மக்களுக்கான வங்கி சேவைகளை வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள்தான் முன்னணியில் இருக்கிறது என்பதற்கான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சேவைகள் குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறையின் சார்பாக, தாக்கல் செய்ய ப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 87 ஆயிரத்து 526 பொதுத்துறை வங்கிக் கிளைகள் இருக்கின்றன. அவற்றில் 28 ஆயிரத்து 815 கிளைகள் (33 சதவீதம்) கிராமப்புறப் பகுதிகளில் இருக்கின்றன.
கடந்த 2016-17 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 2,168 கிளைகளும், 2017-18 ஆம் ஆண்டு காலகட்ட்டத்தில் 834 கிளைகளும், 2018-19 -இல் 438 கிளைகளும், நடப்பாண்டு ஜூன் 30 வரை 86 கிளைகளும் பொதுத்துறை வங்கிகளால் திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 1.34 லட்சம் பொதுத்துறை வங்கி ஏடிஎம்கள் செயல்படுகின்றன. அவற்றில் 27.098 ஏடிஎம்கள் (20 சதவீதம்) கிராமப்பகுதிகளில் செயல்படுகின்றன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தனியார் துறை வங்கிகளை பொறுத்தமட்டில், நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 32 ஆயிரத்து 083 வங்கிக் கிளைகள் இருக்கின்றன. அவற்றில் 6 ஆயிரத்து 846 கிளைகள் (21 சதவீதம்) மட்டுமே கிராமப்புறப் ப்குதிகளில் செயல்படுகின்றன.
தனியார் துறை வங்கி ஏடிஎம்களை பொறுத்தமட்டில் நாடு முழுவதும் மொத்தமுள்ள 69,019 ஏடிஎம்களில், 5,759 (8 சதவீதம்) மட்டுமே கிராமபபகுதிகளில் செய்லபடுகின்றன.
இவ்வாறு அந்த அப்பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது