கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கெரமக்கியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் மூன்று வயது தலித் சிறுவன், அங்குள்ள ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளான். அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் உதவியாளர் சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கன்வாடி ஆசிரியர் மாலாவுக்கும் உதவியாளர் மஞ்சுலம்மாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்ட போது இடையே சிறுவன் வந்துள்ளான். இவர்கள் இருவரது சண்டையைப் பார்த்து பயத்தில் அவன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கோபத்தில் சிறுவனின் தலையில் கத்தியால் தாக்கியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை செய்ய முயற்சித்ததாக ஐ.பி.சி பிரிவு 308 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மல்லந்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.