மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடம் ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டு வந்த அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், புதன்கிழமை மாலை 5 மணிக்குள் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸ், அஜித் பவார் ராஜிநாமா செய்த காரணத்தினால் தங்களிடம் பெரும்பான்மை இல்லை என்றும், இதனால் தானும் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளர் சந்திப்பு: மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னவீஸ்
இதையடுத்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தேவேந்திர ஃபட்னவீஸ், ஆளுநர் பகத் சிங் கோஷியாரிடம் தனது ராஜிநாமா கடிதத்தைச் சமர்பித்தார்.
கடந்த சனிக்கிழமை காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தேவேந்திர ஃபட்னவீஸும், அஜித் பவாரும் முறையே முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பதவியேற்றனர். ஆனால், அவர்களால் 4 நாட்கள் மட்டுமே அந்தப் பதவிகளில் நீடிக்க முடிந்துள்ளது.