புதுதில்லி: போரில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினர் அரசு குடியிருப்புகளில் வசிப்பதற்கான கால அவகாசத்தை ஓராண்டாக நீட்டித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது, முப்படைகளிலும் பணியாற்றி போரில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினர், அரசு குடியிருப்புகளில் தொடர்ந்து வசிப்பதற்கான கால அவகாசத்தை, தற்போதைய மூன்று மாதங்களில் இருந்து ஓராண்டாக நீட்டிக்கும் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் தேவைகளை கருத்தில் கொண்டு, தற்போதைய விதிமுறைகளை ஆய்வு செய்த பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள இந்த பரிந்துரை, படை வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும்.
தற்போதைய விதிமுறைகளின்படி, எதிரிப்படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போதோ அல்லது எதிரிகளின் வான் தாக்குதலிலோ உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர், மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து அரசு குடியிருப்புகளில் வசிக்கலாம் என்ற கால அவகாசம், தற்போது ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.