மும்பை: நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய் மாலை 03.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். முன்னதாக துணை முதல்வர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்திருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர ஃபட்னவீஸும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து விரைவில் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை - காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார் என்றும், பதிவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்து மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி செவ்வாய் மாலை வெளியிட்டுள்ளார். பேரவை கூடியதும் இடைக்கால சாபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.