புது தில்லி: மோடியும் அமித் ஷாவும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று மஹாராஷ்டிர விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அந்தோணி எச்சரித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய் மாலை 03.30 மணியளவில் அறிவித்தார்.
மும்பையில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தனது ராஜினாமா முடிவை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். ஏற்கனவே துணை முதல்வர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்திருந்த நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர ஃபட்னவீஸும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் மோடியும் அமித் ஷாவும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று மஹாராஷ்டிர விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அந்தோணி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளராகளிடம் அவர் கூறியதாவது:
சந்தேகமே இல்லை; இது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மிகப்பெரிய பின்னடைவுதான். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறேன். அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினமான இன்று இது நடந்திருப்பதுதான் மிகவும் முக்கியமானது.
தங்களால் செய்யய இயலாத ஒன்றை நடத்துவதற்காக இந்த அரசானது சிபிஐ, புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை என எல்லா வழிகளையும் பயன்படுத்தும் .
தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை - காங்கிரஸ் கூட்டணியானது மஹாராஷ்ட்ரா மக்களின் நலனுக்காக முழுமையாக உழைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.