நான் சபரிமலை கோயிலுக்கு செல்வது உறுதி, அதை யாராலும் தடுக்க முடியாது என திருப்தி தேசாய் கூறியுள்ளார். இதுதொடர்பாக கொச்சியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது,
அரசியலமைப்பு நாளான நவம்பர் 26-ஆம் தேதி நான் சபரிமலை கோயிலுக்கு செல்வது உறுதி, அதை யாராலும் தடுக்க முடியாது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ? இல்லையோ? நாங்கள் அனைவரும் சபரிமலை செல்வது உறுதி, இதில் மாற்றமில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக, ‘சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது விளம்பரம் தேடிக் கொள்வதற்கான இடமல்ல; ஐயப்பன் கோயிலில் நுழைவோம் என்று அறிவித்து விளம்பரம் தேடிக்கொள்ளும் நடவடிக்கைகளை கேரள அரசு அனுமதிக்காது’ என்று அந்த மாநில தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
அதற்கு, நாங்கள் சபரிமலை செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டியது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது கேரள மாநில அரசின் கடமையாகும். இருப்பினும் எந்தவித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்றாலும் நான் சபரிமலை செல்வது உறுதி. சபரிமலை செல்வதாக இருந்தால் பாதுகாப்பு வழங்கக் கோரி நாங்கள் நீதிமன்றத்திடம் சான்று பெற்று வந்தால் மட்டுமே, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள அரசு கூறியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று திருப்தி தேசாய் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.