மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை ஆதித்ய தாக்கரே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியின் தலைவராகவும் மகாராஷ்டிர முதல்வராகவும் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கிறார்.
இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்த ஆதித்ய தாக்கரே, நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்த ஆதித்ய தாக்கரே, அதைத்தொடர்ந்து மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்புகள் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "நாங்கள் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கைச் சந்தித்தோம். அவர்களுடைய வழிகாட்டுதலும் ஆசீர்வாதமும் அவசியம். தற்போது நாங்கள் மும்பை திரும்புகிறோம்" என்றார்.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நாளை காலை மும்பை புறப்பட்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.