மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கவுள்ள நிலையில், என்சிபி தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்டோர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர முதல்வராக சிவசேனையின் உத்தவ் தாக்கரே நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளார். இதன்மூலம், பதவியேற்பு விழாவில் இவருடன் இணைந்து பதவியேற்கும் அமைச்சர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உட்பட கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பதவியேற்பு விழா மற்றும் பதவியேற்கப்போகும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அகமது படேல் தெரிவிக்கையில், "அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவிட்டோம். பதவியேற்பு விழாவில் பதவியேற்கப்போகும் நபர்கள் குறித்த பட்டியல் ஊடகங்களுக்கு வியாழன் காலை தெரிவிக்கப்படும்" என்றார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் பாலாசாகேப் தோரத்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், பதவியேற்கப்போகும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்பதை மட்டும் தோரத் தெரிவித்தார்.
இதனிடையே, சிவசேனைக்கு முதல்வர் பதவி தவிர்த்து 15 அமைச்சர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் மற்றும் 13 அமைச்சர்கள் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் மற்றும் 13 அமைச்சர்கள் பதவியும் ஒதுக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.