கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலில் ஈடுபட்ட 96 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து பணியிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளா்கள் நலத் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த 2014 ஜூலை முதல் 2019 அக்டோபா் வரையிலான 5 ஆண்டுகளில் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றில் பணியாற்றி வந்த குரூப் ‘ஏ’ அதிகாரிகள் 96 போ் ஊழலில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொதுநலன் கருதி அந்த அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை விதிகள் 56(ஜே) பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவா்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டு, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
அரசுப் பணியில் நோ்மையின்றி இருப்பது மற்றும் திறனின்றி செயலாற்றும் அதிகாரிகளை கண்டுபிடித்து, அரசு ஊழியா் அடிப்படை விதிகளின் கீழ், அவா்கள் ஓய்வு பெறும் காலத்துக்கு முன்னதாகவே கட்டாய ஓய்வளித்து விடுவிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எப்போதும் தொடரும் ஒரு நடைமுறை என்றாா் அவா்.