ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த 28 ஆண்டுகளில் 53 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. இவர் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஹரியாணாவில் அதிகமுறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த தனது 28 ஆண்டு கால பணியில் தற்போது 53-ஆவது முறையாக தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஹரியாணா மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றிய இவர் தற்போது தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அசோக் கெம்கா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்று(நவம்பர் 26) அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் மீண்டும் ஒருமுறை தகர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 53-வது முறையாக நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இதன்மூலம் பலர் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது எனக்குத் தெரியும். 28 ஆண்டுகள் நேர்மையாக இருந்ததற்கு கிடைத்த பரிசே இந்த பணியிட மாற்றம்' என்று பதிவு செய்துள்ளார்.
அசோக் கெம்கா மிகவும் நேர்மையான அதிகாரி என்று போற்றப்படுபவர். ஹரியாணா மாநில மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். பல சூழ்நிலைகளில் மிகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சம்மந்தப்பட்ட சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தத்தை 2012ல் ரத்து செய்தார். இதன் மூலமாகவே இவர் முதலில் பிரபலமாகியுள்ளார். இதன் பின்னர் மத்தியிலோ, மாநிலத்திலோ எந்த அரசு வந்தாலும் சரி, நேர்மையான முறையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.