நாடாளுமன்ற மக்களவையில், கோட்ஸே குறித்து பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேசியதற்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், நாதுராம் கேட்சே ஒரு தேசபக்தர் என்று பேசினார். இதற்கு அவையிலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவரை பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதையடுத்து அவர் குழுவில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று பிரக்யா சிங் தாகூர் மக்களைவையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் ஆதரவாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலரான தெசீன் பூனாவாலா போராட்டம் நடத்தினார். பின்னர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி தில்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
'பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் போராட்டம் நடத்தவில்லை; மிகவும் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினேன், ஆனால், போலீசார் வலுக்கட்டாயமாக என்னை இழுத்துச் சென்றனர்' என்று தெசீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.