மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பதில் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின. இதன் முடிவில் கூட்டணியின் தலைவராகவும், மகாராஷ்டிர முதல்வராகவும் சிவசேனையின் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்படி, இன்று மாலை உத்தவ் தாக்கரே மாநில முதல்வராகப் பதவியேற்றார்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல் மற்றும் நவாப் மாலிக், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டன. அதில், விவசாயக் கடன்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் மருத்துவமனை மூலம் மாநிலம் முழுவதும் மக்களுக்கு ஒரு ரூபாயில் குறைந்தபட்ச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்களில் சிவசேனையின் பிரதான வாக்குறுதியாக இருந்த, 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்படும் என்பதும் இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்பிறகு, வேலைவாய்ப்பில் மகாராஷ்டிர இளைஞர்களுக்கு 80 சதவீதம் இடம் ஒதுக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்பதும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.