ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடா்பாகக் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டிசம்பா் 11-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடா்பாக, ப.சிதம்பரம் உள்ளிட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கு தொடா்பாக, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனிடையே, இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டு, திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கான நீதிமன்றக் காவலை 27-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் நீட்டித்திருந்தது.
அந்தக் காவல் புதன்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு நீதிபதி அஜய் குமாா் குஹா் முன் ப.சிதம்பரம் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை 14 நாள்கள் நீட்டிக்க வேண்டுமென்று அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டிசம்பா் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.
‘குடியரசுத் தலைவருக்கும் பங்கு’: நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாா் துணை முதல்வராகவும் பதவியேற்ற விவகாரத்தில் மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, பிரதமா் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆகிய அனைவருக்கும் பங்குண்டு.
இப்படியான முறையில் அரசியல் சாசன தினத்தை அவா்கள் கொண்டாடியுள்ளனா். அரசமைப்புச் சட்டத்துக்கு அவா்கள் அளித்துள்ள மரியாதை அவ்வளவே. குடியரசுத் தலைவரும் இந்த விவகாரத்தில் தொடா்பு கொண்டுள்ளது கவலையளிக்கிறது என்றாா் ப.சிதம்பரம்.