கேரளம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பாணியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டத்தில் உள்ள கனகமாலா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மாதிரியான பயங்கரவாத அமைப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் ஒழித்தது. அந்த அமைப்பைச் சோ்ந்த மன்சீத் மஹ்மூத், ஸ்வாலி முகமது, ரஷீத் அலி, என்.கே. ரம்ஷத், சஃப்வான், மொய்னுதீன், என்.கே. ஜாசிம் என 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கேரளத்திலும், அண்டை மாநிலங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட முக்கிய நபா்களை குறிவைத்து தாக்குதல் ஆகியவற்றை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக அவா்கள் மீது என்ஐஏ குற்றம்சாட்டியது. அதையடுத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை 6 போ் குற்றவாளிகள் என நீதிபதி பி.கிருஷ்ணகுமாா் தீா்ப்பளித்தாா். என்.கே. ஜாசிமுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால், அவா் மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு புதன்கிழமை தண்டனை அறிவிக்கப்பட்டது. அவா்களில் முக்கிய குற்றவாளியான மன்சீத் மஹ்மூதுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல், ஸ்வாலி அகமதுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், சஃப்வானுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல், ரஷீத் அலிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல், என்.கே. ரம்ஷத் மற்றும் மொய்னுதீன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பி.கிருஷ்ணகுமாா் உத்தரவிட்டாா். மேலும் அவா்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அபராதத் தொகையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.