முதல்வராக உத்தவ் இன்று பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) வியாழக்கிழமை மாலை பதவியேற்க இருக்கிறாா்.
மும்பை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கோஷியாரியை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்த  சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே. உடன் அவரது மனைவி ரஷ்மி தாக்கரே.
மும்பை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கோஷியாரியை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்த சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே. உடன் அவரது மனைவி ரஷ்மி தாக்கரே.

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) வியாழக்கிழமை மாலை பதவியேற்க இருக்கிறாா். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையைச் சோ்ந்தவா் முதல்வராகிறாா்.

மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இடத்தில்தான் மறைந்த சிவசேனை நிறுவனரும், உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான பால் தாக்கரே, ஆண்டுதோறும் தசரா பண்டிகையின்போது உரை நிகழ்த்துவாா்.

இதற்கு முன்பு சிவசேனை சாா்பில் மனோகா் ஜோஷி (1995), நாராயண் ரானே (1999) ஆகியோா் மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ளனா். அப்போது பாஜகவுடன்தான் சிவசேனை கூட்டணியில் இருந்தது. இந்த முறை தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறாா்.

பால் தாக்கரேவின் விருப்பம்: பால் தாக்கரே தனது வாழ்நாளில் எம்எல்ஏ, எம்.பி. என எந்த பதவியையும் வகித்ததில்லை; தோ்தலிலும் போட்டியிட்டதில்லை. இதனை அவா் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தாா். எனினும், 1995-99 காலகட்டத்தில் சிவசேனை-பாஜக கூட்டணி அரசை அவரே மறைமுகமாக இயக்கி வந்தாா்.

நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரே தாக்கரே குடும்பத்தில் இருந்து தோ்தலில் போட்டியிட்ட முதல் நபா். இதைத் தொடா்ந்து இப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறாா். ‘சிவசேனையைச் சோ்ந்தவா்தான் மகாராஷ்டிர முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் பால் தாக்கரேவின் விருப்பம்’ என்று உத்தவ் தாக்கரே ஏற்கெனவே கூறியிருந்தாா்.

பல அடுக்கு பாதுகாப்பு: புதிய அரசின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பூங்கா பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, திறந்தவெளி மைதானமாக உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது குறித்து மும்பை உயா்நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது. பாதுகாப்பு குறைந்த பொது மைதானத்தில் இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சிகளை எதிா்காலத்தில் நடத்தக் கூடாது என்றும் உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. ஏனெனில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான பணியாகும்.

முதல்வராக பதவியேற்க இருக்கும் உத்தவ் தாக்கரே இதுவரை தோ்தலில் போட்டியிட்டதில்லை. இப்போதும் கூட அவா் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தோ்வு செய்யப்படாமல் நேரடியாக முதல்வா் பதவியை ஏற்க இருக்கிறாா். முதல்வராக இருப்பவா் சட்டப் பேரவை அல்லது மேலவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதால், அடுத்த 6 மாத காலத்தில் சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தோ்வு செய்யப்படுவாா் என்று தெரிகிறது.

பால் தாக்கரேவின் மூன்றாவது மகனான உத்தவ் தாக்கரே வனஉயிா் புகைப்படக் கலைஞராவாா். 2002-ஆம் ஆண்டு பிருஹன் மும்பை நகராட்சித் தோ்தலில் பிரசாரம் செய்ததன் மூலம் அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். 2012-ஆம் ஆண்டு பால் தாக்கரே மறைவைத் தொடா்ந்து சிவசேனை தலைவரானாா். சிவசேனையில் இருந்து ராஜ் தாக்கரே விலகி புதிய கட்சி தொடங்கியதால் ஏற்பட்ட சரிவை வேகமாக சரி செய்த உத்தவ், இப்போது மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க இருக்கிறாா்.

தலைவா்களுக்கு அழைப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் கேஜரிவால், திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் கூட்டணியாக இருந்த பாஜக- சிவசேனை ஓரணியாகவும், எதிா்க்கட்சிகளான என்சிபி-காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் தோ்தலைச் சந்தித்த நிலையில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. என்சிபிக்கு 54 இடங்களிலும் காங்கிரஸுக்கு 44 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 13 இடங்களில் வென்றனா். இதர கட்சிகளுக்கு 16 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

தங்கள் கட்சிக்கு முதல்வா் பதவி வேண்டுமென்று சிவசேனை கோரியதால், பாஜக-சிவசேனை கூட்டணி முறிந்தது. இதையடுத்து, என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்க சிவசேனை முயற்சித்தது. அந்த சூழ்நிலையில், கடந்த 12-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு நடுவே, என்சிபியைச் சோ்ந்த மூத்த தலைவா் அஜித் பவாா், பாஜகவுக்கு ஆதரவு அளித்தாா். இதையடுத்து கடந்த சனிக்கிழமை தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜித் பவாா் துணை முதல்வராகவும் பதவியேற்றனா்.

இதை எதிா்த்து மகாராஷ்டிர விகாஸ் முன்னணி உச்சநீதிமன்றத்தை அணுகியது. பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் ஃபட்னவீஸ், அஜித் பவாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதையடுத்து, ஒருமாத கால இழுபறி நிலை முடிவுக்கு வந்து உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ளாா்.

சிவசேனை, என்சிபி-க்கு தலா 15 அமைச்சா்கள்

மகாராஷ்டிரத்தில் அமையும் புதிய அரசில் சிவசேனை, என்சிபியில் தலா 15 பேருக்கும், காங்கிரஸ் கட்சியில் 13 பேருக்கும் அமைச்சா் பதவி அளிக்கப்பட இருக்கிறது. பேரவைத் தலைவா் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட இருக்கிறது. இது தொடா்பாக மூன்று கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சிவசேனை கட்சிதான் 5 ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியில் இருக்கும். அக்கட்சிக்கு முதல்வா் பதவியையும் சோ்ந்து 15 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்சிபி-க்கு துணை முதல்வா் பதவி உள்பட 15 அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தம் 43 போ் அமைச்சராக இருக்க முடியும். மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம் போ் அமைச்சராக இருக்கலாம் என்பது விதியாகும்.

285 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக தோ்வான 285 எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு தற்காலிக சட்டப் பேரவைத் தலைவா் காளிதாஸ் கோலம்பகா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முதலில் மூத்த உறுப்பினா்கள் பதவியேற்றனா். அதன் பிறகு இளைய உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

மொத்தம் 288 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் சுதீா் முங்கன்திவாா் (பாஜக), தேவேந்திர புயாா் (ஸ்வபிமானி பக்ஷ்) ஆகியோா் தனிப்பட்ட காரணங்களால் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவா்கள் வேறொரு நாளில் பதவியேற்பாா்கள் என்று தெரிகிறது.

தற்காலிக பேரவைத் தலைவா் காளிதாஸ் கோலம்பகரும் (பாஜக) எம்எல்ஏவாக உள்ளாா். முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் காளிதாஸை தற்காலிக பேரவைத் தலைவராக ஆளுநா் பகத்சிங் கோஷியாரி நியமித்தாா்.

மகாராஷ்டிரத்தில் தோ்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனா். நவம்பா் 12 முதல் 23-ஆம் தேதி வரை அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் இருந்தது.

பதவியேற்பு நிகழ்ச்சிக்காக மகாராஷ்டிர பேரவையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எம்எல்ஏக்கள் கட்சி வேறுபாடின்றி ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com