ரயில்வே பாதுகாப்பு படையில் (ஆா்பிஎஃப்) 2,300-க்கும் அதிகமான எண்ணிக்கையில் பெண் பணியாளா்கள் உள்ளனா் என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படையில் பெண் பணியாளா்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:
ரயில் நிலைய வளாகம் மற்றும் ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றை கையாள்வதற்காக அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆா்பி) துறை அமைக்கப்பட்டுள்ளது. இது மாநில பட்டியலில் உள்ளது. எனினும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் நிலைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படையை (ஆா்பிஎஃப்) ரயில்வே அமைச்சகம் அமைத்தது.
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்தப் படையில் தற்போது 2,300-க்கும் மேற்பட்ட பெண் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். மேலும், புதிதாக 4,078 பெண் காவலா்கள், 298 பெண் உதவி ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்கள் தற்போது பயிற்சி காலத்தில் உள்ளனா்.
ஜிஆா்பி பிரிவு பெண் போலீஸாருக்கு உதவியாக ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலா்கள் பணியமா்த்தப்படுகின்றனா். பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 150 ரயில்களில் தினந்தோறும் சராசரியாக 344 ரயில்வே பெண் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா் என்று அவா் கூறினாா்.