தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு எதிரான இரண்டு கிரிமினல் வழக்குகள் குறித்த தகவல்களை மறைத்ததாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நேற்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். அவருடன் சிவசேனை கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஃபட்னவீஸூக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளில் ஃபட்னவீஸூக்கு எதிராக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஃபட்னவீஸ் தனது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இந்த தகவலை வெளியிடவில்லை என்று வழக்கறிஞர் சதீஷ் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து மும்பை நீதிமன்றம் உத்தரவிடவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாக்பூர் நீதிமன்றம் தரப்பில் இருந்து ஃபட்னவீஸூக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. நாக்பூர் போலீசார் இன்று ஃபட்னவீஸூன் வீட்டிற்குச் சென்று சம்மனை வழங்கியுள்ளனர். விரைவில் ஃபட்னவீஸ் இதற்கு பதில் அளிப்பார் என்று தெரிகிறது.