மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தர் என்று கூறியதற்காக பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை நாடாளுமன்ற மக்களவையில், நாதுராம் கேட்ஸே ஒரு தேசபக்தர் என்று பேசினார். இதற்கு அவையிலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவரை பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதையடுத்து அவரை குழுவில் இருந்து நீக்கி மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், கோட்ஸேவை தேச பக்தர் என்று கூறிய பிரக்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பிரக்யா சிங் தாகூர். 'எனது எந்தவொரு கருத்துக்களினால் யாராவது காயமடைந்திருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு தவறாக எழுதப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசத்திற்கு அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன்' என்று கூறினார்.
மேலும், 'ராகுல் காந்தி எனது கருத்தை வைத்து என்னை பயங்கரவாதி என்று குறிப்பிட்டதற்கு நான் வன்மையாக கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை' என்றார்.
அதேபோன்று பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, 'பிரக்யா சிங் தாக்கூர் கூறியதை கண்டிக்கிறோம். இந்த சித்தாந்தத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.