கேரள கன்னியாஸ்திரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முளக்கலுக்கான ஜாமீன் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ முளக்கலுக்கு எதிராக கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிராங்கோ முளக்கலைக் கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், அதன்பின்னர் நீதிமன்றத்தின் வாயிலாக ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கும் கோட்டயம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, கன்னியாஸ்திரி லூசி மீதும், பிஷப் பிராங்கோ புகார் அளித்தார். அதன் அடிப்படையில், லூசியை கன்னியாஸ்திரி பதவியில் இருந்து நீக்கி வாடிகனில் உள்ள உயர்நிலைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், பிரான்கோவின் ஜாமீனை ஜனவரி 6, 2020 வரை நீட்டித்து கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.