திறந்தவெளியில் மலம் கழித்தால் குடும்ப ரேஷன் அட்டை ரத்து! - எங்கு தெரியுமா?
திறந்தவெளியில் மலம் கழித்தால் அவர்களது குடும்ப ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிராவில் உள்ள கிராமப் பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் கழிவறைகள் இல்லாத வீடுகளுக்கு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. மேலும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கிராமப்பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இதனைத் தடுக்க மகாராஷ்டிரத்தில் கிராமப் பஞ்சாயத்து ஒன்று அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரண்டி என்ற கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு குடும்ப ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கூறும்போது, 'எங்களது கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் உள்ளன. இருந்தபோதிலும், மக்கள் கழிவறைகளை பயன்படுத்துவதை விரும்புவதில்லை. திறந்தவெளிகளில் முக்கியமாக சாலையோரப் பகுதிகளில் அவர்கள் மலம் கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். இதனை மாவட்ட நிர்வாகம் வரவேற்றுள்ளது.