மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரே, அரசுக்கு சொந்தமான பங்களாவில் தங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு, சிவசேனா கூட்டணி ஆட்சி(Maha Vikas Aghadi) அமைத்துள்ளது. நவம்பர் 28ம் தேதி(வியாழக்கிழமை) சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 169 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இந்நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள அவர், மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் குடியிருப்பிற்குச் செல்ல மாட்டார் என்றும் அவரது தந்தை பால் தாக்கரேவால் கட்டப்பட்ட பாந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள பாரம்பரிய பங்களாவில்தான் தங்குவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் குடியிருப்பை அரசு அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.