19 வயதான கிறுத்துவ பெண் ஒருவர், அபுதாபிக்கு தப்பிச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்ற செய்தி அண்மையில் ஊடகங்களில் பரவியது. கல்லூரிக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். சியானியின் கல்லூரி தோழர்கள் சியானி காணாமல் போனதை ஒட்டி தலைமை நீதிபதியிடம் மனு அளித்தனர். அதில் உலகு எங்கிலும் பேரழிவை உருவாக்கும் சக்திகளால் ஒரு இந்திய குடிமகள் கடத்தப்பட்டுள்ளார்’என்று குறிப்பிட்டிருந்தனர்.
தன்னுடைய காதலுக்காக சொந்த விருப்பத்தின் பேரில்தான் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும், ஒரு பயங்கரவாத குழுவில் சேர வற்புறுத்தப்பட்டு கடத்தப்பட்டதாக வெளிவந்த ஊடகச் செய்திகளைக் நம்ப வேண்டாம் என்று கூறினார்.
தற்போது ஆயிஷா என்று அழைக்கப்படும் சியானி ஞாயிற்றுக்கிழமை துபாய் டெய்லி பத்திரிகை பேட்டியில் கூறியது: 'இத உண்மையல்ல. உண்மையான காதலை நான் கண்டு கொண்டேன், எனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் அபுதாபிக்கு வந்துள்ளேன். என்னை மதம் மாற யாரும் வற்புறுத்தவில்லை, என் சுய விருப்பத்தினால்தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும் என்னுடைய வாழ்க்கைக் குறித்த முடிவுகளை எடுக்கும் வயதும் உரிமையும் எனக்கு இருக்கிறது’ என்றார்.
செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணி வரை கல்லூரியில் வகுப்புகளில் கலந்து கொண்டார் சியானி. அதே நாள் பிற்பகலில், சமூக ஊடகம் மூலம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு நட்பாகி காதலாக மலர்ந்த இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக மதியம் 2.45 கோ ஏர் விமானத்தில் ஏறி அபுதாபிக்குப் பறந்துவிட்டார். சியானி திடீரென்று காணாமல் போனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அவரது பெற்றோர் தங்கள் மகள் ஐ.எஸ் போன்ற 'இஸ்லாமிய இயக்கத்தினரால் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். சியானியை ஏமாற்றி மூளைச் சலவை செய்து அவர்கள் கடத்தியிருக்கலாம் என்றும் கூறினர்.
கடந்த சனிக்கிழமை, தனது சொந்த விருப்பத்தின் பேரில் செப்டம்பர் 24 அன்று அபுதாபி நீதிமன்றத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் சியானி.