மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 125 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டார். அதன்படி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மகாராஷ்டிர மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், கோத்ருட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதேசமயம், அமைச்சர் வினோத் தாவ்தே, அம்பரீஷ் ராஜே அத்ராம், சந்திரசேகர் பவான்குலே, ஏக்நாத் காத்சே, பிரகாஷ் மேத்தா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இது தவிர நிறைய எம்எல்ஏ-க்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்களின் பெயர்களும் இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 125 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் சிங், "12 எம்எல்ஏ-க்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்த சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக, சிவசேனா மற்றும் சில சிறிய கட்சிகளின் கூட்டணியுடன் எதிர்கொள்ளவுள்ளது" என்றார்.
முன்னதாக, பாஜக - சிவேசனா இடையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. எனவே, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிகிறது. இதர சில கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தனது 164 தொகுதிகளில் தொகுதிப் பங்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.