ஸ்விஸ் வங்கியில் 6 இந்தியர்களின் வங்கிக் கணக்கில் 64 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் 300 கோடி! 

பல ஆண்டு காலமாக செயலற்றுக் கிடக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது ஸ்விஸ் வங்கி.
ஸ்விஸ் வங்கியில் 6 இந்தியர்களின் வங்கிக் கணக்கில் 64 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் 300 கோடி! 


பல ஆண்டு காலமாக செயலற்றுக் கிடக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது ஸ்விஸ் வங்கி.

இந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு விஷயம் தெரிய வந்திருக்கிறது, என்னவென்றால், ஸ்விஸ் வங்கிகளில் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியர்களின் வங்கிக் கணக்கில் கேட்பாரற்றுக் கிடக்கிறதாம். அதே காலக்கட்டத்தில்தான், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமல், இங்கே எத்தனையோ லட்சக்கணக்கான ஏழைகளின் வங்கிக் கணக்கில் இருந்து அபராதமாக ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சரி மீண்டும் விஷயத்துக்கு வருவோம், இந்த 300 கோடியும், ஏதோ லட்சக்கணக்கான வங்கிக் கணக்கில் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். வெறும் 6 பேரின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே 300 கோடி அளவுக்கு இருக்கிறது. அதில், 3 பேர் தங்களது பெயருடன், பிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் பாரிஸ் என்றும், மற்றொருவர் லண்டன் என்றும், ஒருவரது பிறப்பிடம் பற்றி தெரியாமலும் உள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் பெயர்களையும் சேர்த்தே ஸ்விஸ் வங்கி பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகள் எல்லாம் 1954ம் ஆண்டு துவங்கப்பட்டவை. இந்த விவரங்களை பொது வெளியில் வெளியிட்டிருப்பதன் நோக்கம், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இன்னும் 5 ஆண்டுகளில் உரிய ஆவணங்களைக் காண்பித்து, ஸ்விஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்க வேண்டும். இல்லை என்றால், பணம் அரசுக்குச் சென்றுவிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு முதல் மேற்கண்ட 6 பேரின் பெயர்களும் ஒவ்வொரு ஆண்டும் வங்கி வெளியிடும் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. அந்த பணத்தை வாடிக்கையாளர் திரும்பப் பெற்றால்தான் அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2017ம் ஆண்டு நிலவரப்படி ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் மட்டும் ரூ.7000 கோடி அளவுக்கு பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கருப்புப் பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஸ்விஸ் வங்கியில் சேரும் இந்தியர்களின் பணம் மட்டும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அதே சமயம், ஸ்விஸ் வங்கியில் இருப்பதெல்லாம் கருப்புப் பணம் என்றும் ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com