ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ப. சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ. 305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனத்துக்கு ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, ப. சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. பின்னர், சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், 14 நாள் நீதிமன்றக் காவலில், கடந்த மாதம் 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு, கடந்த 19-ஆம் தேதி அவருடைய நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தில்லி சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.