ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், தனது மகனுக்காக வாங்கிய கேரம் போர்டை எடுத்துச் செல்ல மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்திருக்கிறார்.
இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இருந்த போதிலும், முஸ்லீம் பெண்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தொடர்ந்து வருகிறது. ஆனால், இதற்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில் கோட்டா நகரில் முத்தலாக் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்தும் முஸ்லீம் பெண் ஒருவரை அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
கோட்டா பகுதியைச் சேர்ந்த ஷப்ரூனிஷா(24) சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே அவரது கணவர் ஷஹில் வந்துள்ளார். அப்போது, தனது மகனுக்காக வாங்கிய கேரம் போர்டை எடுத்துச் செல்ல மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஷப்ரூனிஷா, அதனைச் எடுத்துச் செல்ல மறுத்ததால், அவ்விடத்திலேயே வைத்து மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து ஷப்ரூனிஷா, கணவர் ஷஹில் அகமது மீது காவல்துறையில் புகார் அளித்தார். போலீசாரும் ஷஹில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஷப்ரூனிஷா தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறார். காவல்துறையினர் ஷஹிலிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிந்த பின்னரே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.